Thursday, September 4, 2008

குர்ர்ர்ர்ர்ர்!

நீங்க போய் வெளியே படுத்துக்குங்க'' என்றாள் கமலாம்மாள். கோபாலன் திடுக்கிட்டார். எந்தச் சூழலிலும் கணவரைப் பிரிந்து படுத்ததேகிடையாதே!
ஒரே மகன் சீனுவுக்கு சமீபமாகத்தான் திருமணம் நடந்தது. கமலாம்மாளும், கோபாலனும் ஒரே அறையில் படுப்பதுபற்றி... மருமகள் தன் கணவனுடன் தாறுமாறாக விமர்சித்து...
`இந்த வயதில் இப்படியா?' எனக் கேட்டு நக்கலாகப் பேசினாள். அதைக் கேட்டது முதலே கமலாம்மாள் வேதனையுற்றாள். அதைத் தன் கணவனிடம் கூறவில்லை. `வராந்தாவில் படுங்கள்' என்று மட்டும் கூறிவிட்டாள்.
தனிமையில் உறக்கம் பிடிக்கவில்லை. எழுந்து தண்ணீர்ச் சொம்பை நெருங்குகையில்... விளக்கு அணைந்தது. சொம்பு தவறி கீழே விழுந்தது.சப்தம் கேட்டு கோபாலன் வந்தார். தீக்குச்சி உரசி... விளக்கைப் பொருத்த... சூழ்நிலை புரிந்து.... தண்ணீர் கொண்டு கொடுத்தார்.
முதுமையின் இயலாமைக்கு உதவுவதுதான் துணை என்பதன் அர்த்தங்களை யார் இங்கே உணருகிறார்கள்? என நினைத்தவள்,
``இனிமே நீங்க உள்ளேயே படுத்துக்கங்க'' என்றாள் கனிவாக..

0 comments: