எவ்வளவோ பிரச்னைகளில் சிக்கி மூச்சுத்திணறும் சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கு இப்போது புதிய பிரச்னை ஒன்று புறப்பட்டிருக்கிறது.
வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்துகொண்டிருப்பவர்களுக்கு எதைச் சாப்பிடுகிறோம்? எப்படிச் சாப்பிடுகிறோம்? என்பது தெரியாமல் அவசர அடியாக அள்ளி வாயில் போட்டுக்கொண்டு ஓடுகின்றனர். இவர்களில் சிலர் உணவுக்குப் பதில் வெறும் நொறுக்குத் தீனியாகத் தின்றே பசியைப் போக்கிக் கொள்வார்கள். அதுவும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வரும் சிப்ஸ், லேஸ், போன்றவைதான் அதிகம். பிட்ஸா, பர்கர் இவை அடுத்த கட்டத்தில் உள்ளவர்களின் உணவு. ``இவர்களெல்லாம் தங்களுக்குத் தெரியாமலே நோயை விலை கொடுத்து வாங்கி வைத்துக்கொள்கிறார்கள் என்பதே அதிர்ச்சிகரமான உண்மை'' என்கிறார் உணவுப் பாதுகாப்பு நிபுணர் பசுபதி. எப்படி?
``ஜங்க் ஃபுட் அயிட்டங்கள் கெட்டுப் போகாமலும், ருசியாகவும் இருக்க கலக்குற பொருட்களில் அமோனியாவும் கலந்து இருக்கும். இது புற்றுநோயை வரவழைக்கக் கூடியது. இந்த மாதிரியான உணவுப் பொருட்களை ஒரு குறிப்பிட்ட குளிர்ப்பதன வசதியில் மைனஸ் 18 டிகிரி முதல் 22டிகிரி வரை வைக்கணும். ஆனால், இதை எப்பவும் மெயின்டெயின் பண்ண முடியாது. இதுபோன்ற நேரங்களில் ஜங்க் ஃபுட்டில் நீர்க்குமிழிகள் உண்டாகும். இது உணவுப் பொருள் மீது படிந்து கெட்டித் தன்மையை ஏற்படுத்திவிடும். பட்டாணி பாக்கெட் வாங்கி ஆட்டிப் பார்த்தோம் என்றால் அது தனித்தனியாக ஆடும். ஆனால் நீர்க்குமிழி உண்டான பாக்கெட் அப்படி ஆடாமல் மொத்தமாக ஆடும். இது கெட்டுப் போன நிலையில் உள்ள பாக்கெட்.
அதேபோல் ஃப்ரூட் ஜெல்லியில் சேர்க்கிற கலரிங் பொடிகள். இந்த வண்ணங்களை ஏற்று செரிமானம் செய்கிற சக்தி நம் ரத்தத்திற்குக் கிடையாது. சிறுநீரகமும் இதை சுத்திகரிக்காது.
ஒரு பாக்கெட்டில் எவ்வளவு கெமிக்கல் கலந்து தயாரிக்கணுமோ அவ்வளவு குறைவான (100கிராம்) அளவுதான் கலப்பார்கள். ஆனால், இதைச் சாப்பிடும் ஒரு குழந்தை டேஸ்ட்டுக்காக அடிக்கடியோ, அதிகமாகவோ சாப்பிட்டால் என்ன ஆகும் என்று யாரும் யோசிப்பது இல்லை. குழந்தைகள் மட்டுமில்லை பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குறிப்பிட்ட நோய் உள்ளவர்கள் சோடியம் சம்பந்தப்பட்ட பொருட்களைச் சாப்பிடக்கூடாது. ஆனால், இதுபற்றி ஜங்க் ஃபுட் சாப்பிடுகிற யாருக்கும் தெரியறதே இல்லை'' என்று நொறுக்குத் தீனி பிரியர்களுக்குப் பீதியைக் கிளப்பினார்.
``வடஇந்திய உணவு விற்கிற சாட் ஷாப்களில் சேர்க்கிற மசாலாப் பொடிகள், கலர் பொடிகள் எல்லாம் `எப்போது தயாரித்தது, அவை சுத்தமானவையா' என்பதற்கு எந்த விளக்கமும் கிடையாது. அங்கு வேக வைத்த உருளைக்கிழங்குகளையும், நறுக்கிய வெங்காயத்தையும் அப்படியே தட்டுகளில் வைத்திருப்பாங்க. இந்த இரண்டிற்கும் காற்றில் உள்ள நுண்கிருமிகளை ஈர்க்கும் தன்மை அதிகமா இருக்கும். பக்கத்துல ஒருத்தர் தும்மினால்கூட கிருமிகளை அப்படியே இது ஈர்க்கும். எவ்வளவு டேஞ்சர் பாருங்க. சாட், பிஸ்கட், பர்கர், பிட்ஸா இவையெல்லாமே மேற்கத்திய நாகரிகத்திலிருந்து வந்தவைதான். ஆனால் அங்கே உள்ள வெப்பநிலைக்கும் கலக்குற பொருட்களுக்கும் இங்கே உள்ள நிலைக்கும் வித்தியாசம் இருக்கு.
ஒரு பொருளின் தன்மைக்கு அதிகமாக அதைச் சூடுபடுத்தவே கூடாது. ஒன்றரை நிமிடத்தில் 150 டிகிரியில் சூடுபடுத்தும்போது ஏற்படும் உயிர் வேதியியல் மாற்றம் உடலுக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மாற்றத்தை `பாலி அக்ரலைமைட் ஃபார்மேசன்' என்று சொல்லி உலக விஞ்ஞானிகளே ஏற்றுக்கொள்கிறார்கள்'' என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் உணவுப் பாதுகாப்பு நிபுணர் பசுபதி.
``பிட்ஸா, பர்கர், பிரெஞ்ச் பிரைஸ், உருளை, பெப்சி, கோக், எண்ணெயில் தயாரித்த ஆயில் பிரைட் சிக்கன், லேஸ், சிப்ஸ், ஐஸ்க்ரீம் இதெல்லாமே ஜங்க்ஃபுட் அயிட்டம்தான். இளையதலைமுறைக்கு பாதி நேர சாப்பாடே இதுதான். ஒவ்வொரு உணவும் இப்படித்தான் சாப்பிடணும்னு விதிமுறை இருக்கு. முழு கோதுமையை அரைத்து சாப்பிடுவதுதான் நல்லது. மைதா நல்லதல்ல. இது நம்ம உடலுக்கு சக்தியைத் தராமல் ஜீரணம் ஆவதற்காக நம் உடம்பிலிருந்து சக்தியை எடுத்துக்கொள்ளும். சீனினு சொல்ற சர்க்கரையும் அப்படித்தான். நிலத்தில் உரம் போடாமல் வளர்க்கிற ஆர்கானிக் உணவுதான் நல்லது.
ஒருமுறை சாப்பிடும்போது நம் உணவில் ஸ்டார்ச், புரோட்டின், கொழுப்பு சரிவிகிதத்தில் இருக்க வேண்டும். இப்படி உணவுமூலம் உடம்பை ஈசியா கட்டுப்படுத்தலாம்.
இந்த கலோரி அளவு சரியாக கிடைக்க கூட்டு, பொரியல், காய்கறி வைத்து சாப்பிடணும். அப்படி சாப்பிட்டால் டயாபடிக் வராது.
சாப்பாடு சாப்பிடறது மூலமா நமக்குக் கிடைத்த கார்போ ஹைட்ரேட்டை எரிக்க வாக்கிங், எக்ஸர்சைஸ் கண்டிப்பா போகணும். இலை போட்டு பரிமாறும் கலாசாரம் வந்ததே சத்தான உணவு கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான். அதாவது காய்கறி, பருப்பு, உப்பு, புளிப்பு, இனிப்பு எல்லாமே சமஅளவில் நம்ம உடம்பிற்குக் கிடைக்கும்படி செய்யத்தான் முன்னோர்கள் தலைவாழை இலையில் விருந்து வைக்கிற பழக்கத்தைக் கொண்டு வந்தாங்க'' என்று பாரம்பரிய பழக்கத்தின் பாதுகாப்பைப் பற்றி விளக்கினார் ஜி.ஆர்.டி நட்சத்திர ஹோட்டலின் சமையல் நிபுணர் சீத்தாராம்.
இதையும் மீறி தொடர்ந்து இதுபோன்ற உணவு, நொறுக்குதீனி பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைப் பற்றி விளக்கினார் மருத்துவர் சதீஸ்.
``ஒவ்வொருத்தருடைய உடலமைப்பு, குடல், இரைப்பை அது சுருங்கி விரியும் தன்மை இதைப் பொறுத்து பாதிப்பின் தீவிரம் இருக்கும். பொதுவா ஜீரணம் செய்ய பித்தநீர், கணையநீர் தேவை. இது குறைந்தால் ஜீரணம் ஆகாது. இவையெல்லாம் நாம் சாப்பிடுகிற உணவைப் பொறுத்துதான் சரியாக இருக்கும். இல்லையென்றால் அஜீரணம், வாய்வு, நெஞ்சு எரிச்சல், அல்சர், அதிகபட்சமாக கேன்சர் கூட வர வாய்ப்பிருக்கு சார். அதுவும் தந்தூரி பிரியர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். நேரடியாக தீயில் சுட்டு சாப்பிடுவதே இதற்குக் காரணம். இதை தவிர்ப்பது நல்லது'' என்று எச்சரிக்கையோடு முடித்தார் டாக்டர் சதீஸ்.
Wednesday, July 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment