
வசிஷ்ட முனிவர், இறைவனை வேண்டி, நினைத்ததைத் தரும் காமதேனுவைப் பெற்ற தலம் எது?
2 பிருகு முனிவர் தவம் செய்து ரத்தினங்களை மழையாகப் பெற்ற ஆலயம் எங்கே இருக்கிறது?
3 இந்திரனைப் பிரிந்த இந்தி ராணி, கணவனோடு சேர்ந்து வாழ வரம் பெற்ற கோயில் எது?
4 சந்திரனும், சூரியனும் துயர் நீங்க வழிபட்ட மாசிலாமணீஸ்வரர் அருள்பாலிப்பது எங்கே?
5 அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களுக்கும் பாவ விமோசனம் அளித்த கொடியிடை நாயகியை தரிசிப்பது எவ்விடத்தில்?
6 குசலவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய ஊர் எங்கே இருக்கிறது?
7 வரம் தரும் பிரம்மாவே வரம் பெற்ற இடம் எது?
8 முருகனும், திருமாலும் இறைவனையும், இறைவியையும் பூஜித்தது எங்கே?
9 `கோபம்' புகழ் துர்வாசர் சாந்தம் அடைந்தது எந்த ஊரில்?
பதில் உங்களுக்கே தெரிந்திருக்கும். வட திருமுல்லைவாயில்!
இதே பெயரில் பாடல் பெற்ற இரண்டு தலங்கள் இருக்கின்றன. சீர்காழிக்கு அருகே 12 கி.மீ. தொலைவில் இருப்பது, தென் திருமுல்லைவாயில்.
சென்னை-திருவள்ளூர் ரயில் பாதையில் அம்பத்தூருக்கும் ஆவ டிக்கும் இடையில் இருக்கிறது நாம் இந்த வாரம் தரிசனம் செய்யும் வட திருமுல்லைவாயில்.
கி.பி. 800-க்கும், 850-க்கும் இடையில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தலமாகையால், ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முன்னரே சிறப்போடு விளங்கிய கோயில் இது. `பாசுபதா, பரஞ்சுடரே' என்று உருகி உருகிப் பாடியிருக்கிறார் சுந்தரர். அருணகிரிநாதர், மாதவச் சிவஞானயோகிகள், ராமலிங்க அடிகளார், இரட்டைப் புலவர்கள் ஆகியோரும் இத் தல இறைவனைப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.
வெள்ளிக்கிழமை பௌர்ணமி இரண்டும் சேர்ந்து வரும் நாளில் காலையில் மேலூர் திருவுடை அம்மனையும், மதியத்தில் திருவொற்றியூர் வடிவுடை அம்மனையும், மாலையில் வட திருமுல்லைவாயில் கொடியிடை அம்மனையும் வழிபட்டால் காசிராமேஸ்வரம் சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நீங்கள் உங்கள் வீட்டில் வைத்திருந்தால் நல்லது என்று குட்டி சைஸில் வெள்ளெருக்கு விநாயகரை வாங்கியிருப்பீர்கள். ஆனால் இங்கே வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கருவறை வாசலில் பிரமாண்டமான இரண்டு வெள்ளெருக்குத் தூண்களே இருக்கின்றன. அதனைக் கைகளால் தொட்டு இறைவனை வணங்கினால் நினைத்தவை எல்லாம் நடக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
இத்தனை பெரிய வெள்ளெருக்குத் தூண் இங்கே வந்தது எப்படி?
இதோ அந்தக் கதை.
முல்லைக்கொடி
அது அந்தக் காலம்.
அப்போது திருமுல்லைவாயில் பெரும் காடாக இருந்தது. அங்கே வாணன், ஓணன் என்ற இரண்டு குறும்பர்கள், அரண் அமைத்துக் கொண்டு, நாட்டு மக்களைத் துன் புறுத்தி வந்தார்கள். இருவரும் பைரவ உபாசகர்கள் என்பதால் அவர்களை யாராலும் எதிர்க்க முடியவில்லை.
கடைசியில் துணிந்து வந்தான் தொண்டைமான் என்னும் மன்னன். அவனும் குறும்பர்களை எதிர்கொள்ள முடியாமல், ஓடோடினான்.
அப்படித் தப்பித்து வரும் வழியில் தொண்டைமானின் பட்டத்து யானையின் கால்கள், முல்லைக் கொடியில் சிக்கிக் கொண்டன.
எரிச்சலுற்ற மன்னன் யானையின் மீதிருந்தபடியே தன் வாளால் முல்லைக் கொடிகளை வெட்டி வீசினான். அப்போது அங்கிருந்து குருதி பீரிட்டது.
பயந்து போன மன்னன் கீழிறங்கிப் பார்த்தான். முல்லைக் கொடிகளுக்கு அடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அதன் தலைப் பகுதியில்தான் வாள் பட்டு... ரத்தம்!
மாசிலாமணீஸ்வரர்
துடித்துப் போன மன்னன் தன்னை அதே வாளால் மாய்த்துக் கொள்ள நினைத்த போது அந்த சிவலிங்கத்திலிருந்து ஈசன் வெளிப்பட்டார். ``வெட்டுப் பட்டாலும் மாசிலாமணியாக (குற்றமற்ற லிங்கம்) விளங்குவேன்'' என்று ஆசிவழங்கி, குறும்பர்களை எதிர்க்க, தன் வாகனமான நந்தி பகவானையே அனுப்பி வைத்தார்.
அப்புறம் என்ன?
தொண்டைமான் வெகு சுலபமாக குறும்பர்களை அழித்து அவர்களது கோட்டையைத் தூள் தூளாக்கினான். கோட்டையிலிருந்த குறும்பர்களின் அதிர்ஷ்டத்திற்குக் காரணமான இரண்டு வெள்ளெருக்குத் தூண்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து மாசிலாமணீஸ்வரருக்கு திருக்கோயில் கட்டினான், திருமுல்லைவாயிலில், வெற்றியின் சாட்சியாக அந்த இரண்டு தூண்களையும் கருவறை வாசலில் நிறுவினான்.
குறும்பர்களையோ, குறும்புத் தனங்களையோ மனதில் நினைக்காமல் மாசிலாமணீஸ்வரரை மட்டுமே தியானித்து அந்தத் தூண்களைத் தொட்டு வணங்கினால் நினைத்த காரியம் நடக்கும்.
இந்தக் கோயிலில் நந்தி, வழக்கம் போல இறைவனைப் பார்க்காமல் கிழக்கு நோக்கிப் பார்த்துக் கொண் டிருக்கிறது. ஏன்? தொண்டைமானுடன் போருக்குச் சென்றதால் இப்படி ஒருகோலம்!
தொண்டைமானுக்கு இறைவன் அவன் உயிர்நீப்பதற்குள் விரைவாக காட்சி தந்ததால் இந்த ஆலயத்தில் சுவாமியும் அம்மனும் இடம் மாறி இருக்கிறார்கள். இருவருமே கிழக்கு நோக்கி இருப்பது மிகவும் விசேஷமானது.
வாளால் வெட்டுப்பட்டதால் மாசிலாமணீஸ்வரர் குளிர்ச்சி வேண்டி எப்போதும் சந்தனக் காப்பிலேயே காட்சி தருகிறார். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும்.
சந்தனக் காப்பு சாத்தியிருப்பதால் சுவாமிக்கு தினமும் அபிஷேகம் செய்ய இயலாது என்பதால் பாதரசலிங்கமும் இந்த ஆலயத்தில் காணப்படுகிறது.
சூரியன், சந்திரன் ஆகிய கோள்கள் எல்லாம் இங்கே வந்து இறைவனை வழிபட்டதால் நவகிரகங்களுக்கென்று தனிச் சன்னதி கிடையாது. காரணம், அவர்கள் அனைவருமே இங்கே இறைவனிடம் ஐக்கியமானதுதான்.
மாசிலாமணீஸ்வரரும் கொடியிடை நாயகியும் லிங்கத்திற்குள் ஐக்கியமான நாள் ஒரு வைகாசி மாதம், பௌர்ணமி, கடக ராசி, விசாக நன்னாள்தான். அதனால் இன்றும் அதே தினத்தில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
கொடியிடைநாயகி பெயருக்கேற்ப கொள்ளை அழகுடன் காணப்படுகிறாள். நிஜமாகவே நேரில் வந்து உயிருடன் நிற்பது போலவே இருக்கிறது. கேட்ட வரத்தை உடனே தரும் தேவி இவள் தான் என்பது, பார்த்தாலே தெரிகிறது. பரவசம் ஏற்படுகிறது. கண் பனிக்கிறது. மெய்சிலிர்க்கிறது.
ஒரு விடுமுறை நாளில் திருமுல்லைவாயில் சென்று பிரமாண்டமான ஆலயத்தையும் திருக்குளத்தையும் வலம் வந்து மாசிலாமணீஸ்வரரையும் கொடியிடைநாயகியையும் வணங்கிப் பாருங்கள். நீங்கள் கேட்ட வரங்கள் எல்லாவற்றையும் போட்டி போட்டுக் கொண்டு அவர்கள் தருவதை சந்தோஷமாக வந்து என்னிடம் சொல்லுங்கள்..
``வடதிருமுல்லைவாயில் கோயில் எங்கிருக்கிறது?''
``சென்னை அம்பத்தூருக்குப் பக்கத்தில்''
``கோயில் திறந்திருக்கும் நேரம்?''
``6.30 - 12, 4 - 8''
``என்ன சிறப்பு?''
``நினைத்ததெல்லாம் நடக்கும்''
0 comments:
Post a Comment