Thursday, August 14, 2008

வரலக்ஷ்மி விரதம்


செல்வத்திற்கு அதிபதி லக்ஷ்மிதேவி. அந்த லக்ஷ்மிதேவியின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டால்தான் நமக்கு செல்வம் கிடைக்கும். லக்ஷ்மி தேவியான திருமகள் மீது ஒரு அருமையான பாடல். ``அம்பா நீ இரங்காயெனில் புகல் எதிர்'' என்ற பாடல்தான் அது. செல்வம் வேண்டும் என்று கேட்கும் பக்தர்களுக்கு வரத்தை அள்ளித் தருபவள் வரலக்ஷ்மி. அதனால் தான் ``வரலக்ஷ்மி வருவாய் அம்மா'' என்று அழைக்கிறோம்.

லக்ஷ்மி தேவியின் திரு அவதாரம். துவாதசி வெள்ளிக்கிழமை அன்று லக்ஷ்மி தேவியை பூஜை செய்பவர் லக்ஷ்மியின் அருளைப் பெறுவார்கள். ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையன்று இந்த விரதம் வருகிறது. செல்வம் இல்லை என்றால் இந்த உலகில் எதுவும் நடக்காது. நம்முடைய பெண் தெய்வங்கள் தான் கல்விக்கும், செல்வத்திற்கும், வீரத்திற்கும் உரியவர்களாக விளங்குகிறார்கள். கல்விக்கு அதிபதி, நாமகளான சரஸ்வதி. செல்வத்திற்கு அதிபதி அலைமகளான லக்ஷ்மிதேவி. வீரத்திற்கு அதிபதி பார்வதி தேவி. இவளே துர்காதேவியும் ஆவாள்.

அருளும் - பொருளும் நமக்குத் தேவை.
``அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு''

என்கிறார் திருவள்ளுவர். அதனால் பொருளுக்குரிய லக்ஷ்மி தேவியை நாம் பிடித்துக் கொள்ள வேண்டும்.

இந்த லக்ஷ்மியை அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அஷ்ட லக்ஷ்மியாக _ எட்டு லக்ஷ்மிகளாக நாம் வணங்குகிறோம்.

எல்லா செல்வங்களும் நிரம்பி இருக்கும் இடத்தில் இருப்பவள் அஷ்டலக்ஷ்மி. என்றாலும் எத்தனையோ லக்ஷ்மிகள் இருக்கிறார்கள். ஆனந்த லக்ஷ்மி, ஐஸ்வர்ய லக்ஷ்மி, ஜோதிலக்ஷ்மி, அனந்த லக்ஷ்மி என்று பல லக்ஷ்மிகள் இருக்கிறார்கள்.

வெள்ளிக்கிழமைகளில் ஜோதியாக விளக்கு பூஜை செய்வார்கள். அதனால்தான் தூபலக்ஷ்மி என்று அழைத்து வணங்குகிறோம். வெள்ளிக்கிழமைகளில் லக்ஷ்மி பூஜை செய்யும் பொழுது தீபத்தில் பூக்களையோ, குங்குமத்தையே போட்டு லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லலாம்.

அன்னபூரணி சிலையை வைத்துப் பூஜை செய்பவர்கள், ஒரு கிண்ணத்தில் சிறிது அரிசியைப் போட்டு அதில் அன்னபூரணி சிலையை வைத்து பூஜை செய்வார்கள். அரிசியை தானிய லக்ஷ்மி என்றும், சாதமாக வடித்து விட்டால் அன்ன லக்ஷ்மி என்றும் கூறுவார்கள்.

அஷ்ட லக்ஷ்மிகளிலும் ஒவ்வொரு வகையிலும் நம் வாழ்விற்குரிய செல்வத்தையும், இன்பத்தையும், நிம்மதியையும், தேவையையும் பூர்த்தி செய்கிறாள். அன்னபூரணி சிலைக்கு அடியில் வைத்த அரிசியை மறுநாள் சமையலில் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

பதவியைத் தருபவள் கஜலக்ஷ்மி. குழந்தைப் பேற்றைத் தருபவள் சந்தானலக்ஷ்மி. செல்வத்தைத் தருபவள் தான்ய லக்ஷ்மி. வித்தையைத் தருபவள் வித்யா லக்ஷ்மி. வீரத்தைத் தருபவள் வீரலக்ஷ்மி. வெற்றியைத் தருபவள் விஜயலக்ஷ்மி.

லக்ஷ்மி தேவியை நாம் எப்பொழுதும் பூஜை செய்து கொண்டே இருந்தால்தான் அவள் நம் வீட்டில் வாசம் செய்வாள். எப்பொழுதும் செய்ய முடியாதவர்கள் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.

பலவகைகளிலும் லக்ஷ்மி பூஜையைச் செய்தாலும் வரலக்ஷ்மி பூஜையை வருடத்திற்கு ஏழு முறைதான் செய்ய வேண்டும். இந்த பூஜையைச் செய்ய சில முறைகள் இருக்கின்றன.

வரலக்ஷ்மி பூஜையை வழி வழியாக வீட்டினர் செய்து வந்தால்தான் நீங்களும் செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் ஆவணி மாதம் வரும் ``ஆவணி பௌர்ணமி''க்குள் வரக் கூடிய வெள்ளிக் கிழமையன்றுதான் முதன் முதலில் பூஜையை எடுத்துக் கொள்ளும் சுமங்கலிப் பெண்கள் பூஜையைச் செய்ய வேண்டும்.

திருமணமான பெண்கள்தான் வரலக்ஷ்மி பூஜையை எடுத்துக் கொள்ள வேண்டும். புகுந்த வீட்டில் வரலக்ஷ்மி பூஜையைச் செய்தால் தான் பூஜையை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறந்த வீட்டில் இந்தப் பூஜையைச் செய்யும் வழக்கம் இருந்தாலும் புகுந்த வீட்டில் செய்யும் வழக்கம் இருந்தால்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாமியார் வீட்டில் பூஜையை எடுத்துக் கொள்ளும் போது தங்கள் வீட்டுப் பெண்களுக்கு பிறந்த வீட்டினர் சீர்வரிசைகளைச் செய்ய வேண்டும்.

தாமிரச் செம்போ, வெள்ளிச் செம்போ வாங்கித் தர வேண்டும். வெள்ளியில் லக்ஷ்மிமுகம், குங்குமக் கிண்ணம், சந்தனக் கிண்ணம், தட்டு,பூக்கள், பழங்கள், குங்குமம், மஞ்சள், தேங்காய் என்று வாங்கித் தர வேண்டும்.

வரலக்ஷ்மி விரதம் சில சமயம் ஆடி மாதம் கூடி வருவதுண்டு. இதற்கு சில முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வீட்டை முதல் இரண்டு தினங்களுக்கு முன்னால் சுத்தம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் சுவரை சுத்தப்படுத்தி வரலக்ஷ்மி அம்மன் முகத்தை வரைய வேண்டும். மண்டபம் அமைத்து மண்டபத்தின் நடுவே பெரிய தாம்பாளத்தில் அரிசியைப் பரப்ப வேண்டும். அதன் மீது வெள்ளி அல்லதுதாமிரக் கலசத்தை (செம்பு) வைத்து அதனுள் சிறிது அரிசி, காசு, மஞ்சள், குங்குமம் என்று போட்டு மாலைகளை கலசத்தின் வாயில் பரத்திஅதன் மீது தேங்காயை வைத்து, வரலக்ஷ்மி முகத்தை அமைக்க வேண்டும். தேங்காய்க்கு மஞ்சள் தடவி குங்குமப் பொட்டு வைப்பது முக்கியம். கலசத்துக்கும் நான்கு புறங்களிலும் குங்குமப் பொட்டு வைக்க வேண்டும். கலசத்தின் மேல் புது ரவிக்கைத் துணியை மடிப்பாகப் போட வேண்டும். பட்டுத் துணியை பாவாடையைப் போல வைத்தும் சுற்றுவார்கள்.

தேங்காய் மீது புது ரவிக்கைத் துணியை வஸ்திரமாகச் சுற்ற வேண்டும். பிறகு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். எந்தப் பூஜைக்கும் முதலில் வினாயகர் பூஜை செய்ய வேண்டும். அதற்கு முன்பாக வீட்டின் வாசற்பக்க சுவரில் சின்னதாக கோலம் போட்டு, இப்படி அலங்கரித்த அம்மனை அங்கே வைத்து விட வேண்டும்.

பூஜை செய்பவர்கள் அம்மனை மெல்ல எடுத்துக் கொண்டு ``லக்ஷ்மி ராவே மாயிண்டிக்கு'' (``லக்ஷ்மியே என் வீட்டிற்கு வாம்மா'') என்று பாடி அழைத்து மண்டபத்துக்குள் வைக்க வேண்டும். லக்ஷ்மி தேவியை வாசலிலிருந்து வீட்டுக்குள் அழைப்பதாக ஐதீகம். வீட்டுக்குள் வந்த லக்ஷ்மி தேவியை பூஜை செய்ய வேண்டும்.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு வினாயக பூஜையை முதலில் செய்ய வேண்டும். அம்பாள் முன்பு மஞ்சள்நூலில் ஏதாவது ஒரு பூவைக் கட்டி வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழங்கள் என்று வைக்க வேண்டும். சாமந்தி, இருவாட்சி, மல்லிகை, முல்லை, அல்லி, தாமரை, அரளி, சண்பகம், தாழம்பூ என்று எல்லா வகை பூக்களை வைத்தும் பூஜை செய்யலாம்.

கஷ்டங்கள் வராமல் காப்பது அவள் கடமை அல்லவா! அஷ்டோத்திர மந்திரங்களைச் சொல்லி பூவைப் போட்டு பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காய் உடைத்து வைக்க வேண்டும். பால், தயிர், சர்க்கரைப் பொங்கல், தேங்காய் பூரணம் அடைக்கப்பட்ட கொழுக்கட்டைகள், இட்லி, மகா நைவேத்தியம் (சாதம்) இவைகளை நைவேத்யம் செய்ய வேண்டும். பூக்கட்டி வைத்த மெல்லிய மஞ்சள் சரட்டை எடுத்து தீபாராதனை முடிந்த பின்பு கணவரோ, வீட்டில் உள்ள பெரியவர்களோ கையில் கட்டி விடுவார்கள்.

``லக்ஷ்மி ராவே மாயிண்டிக்கி - ஸ்ரீராஜபுத்ரி'' என்று பாடுவார்கள். ``ஸ்ரீராஜ குலத்து புத்ரியான லக்ஷ்மியே என் வீட்டிற்கு வா'' என்று அவைளப் பாடி மகிழ்விக்க வேண்டும். ``க்ஷுர ஸாகர ஸமுத்ர ராஜ தனயே'' என்றும் லக்ஷ்மிக்குரிய ஸ்லோகங்களைப் பாடலாம். அவள் சமுத்திரத்திலிருந்து பிறந்த ராஜகுமாரி. அவளால்தானே எல்லா செல்வங்களையும் தர முடியும்.

அதனால்தான் ``மலரின் மேஷ திருவே உன்மேல் மையலாகி நின்றேன். இல்லை என்ற சொல்லை இனி இல்லையாக்க வேண்டும்'' என்று பகரதி இவளிடம் கேட்பது நியாயம்தானே?

``பாக்யாத லக்ஷ்மி பாரம்மா-நம்மம்ம நீ சௌ பாக்யாத லக்ஷ்மி லக்ஷ்மி பாரம்மா'' என்ற பாட்டும் வெகு பிரசித்தம்.

பூஜையைப் பார்க்க வந்தவர்களுக்குத் தாம்பூலமும், பிரசாதமும் கொடுக்க வேண்டும்.

வரலக்ஷ்மி விரதம் பிறந்த கதை!

ஒரு சமயம் கைலாயத்தில் பார்வதிதேவி மன வருத்தத்தில் இருந்தாள்.

``பார்வதி ஏன் மன வருத்தத்தில் இருக்கிறாய்?'' என்று ஈசன் விசாரித்தார்.

``கைலாயவாசா, பூலோகத்தில் மக்கள் மன வருத்தத்திலும், சஞ்சலத்திலும் உழல்கிறார்களே. இதைப் போக்க ஏதாவது செய்ய வேண்டும்'' என்று பிரார்த்திக்கிறாள்.

அப்பொழுது ஈசன் வரலக்ஷ்மி விரதத்தின் மகிமை பொருந்திய கதையை பார்வதிதேவிக்குச் சொல்லத் தொடங்கினார்.

பெண்களில் குணவதியாகத் திகழ்ந்த சாருமதி என்பவள் தாய், தந்தை, கணவர், மாமனார், மாமியார் என்று எல்லோரிடமும் அன்பு உடையவளாகத் திகழ்ந்தாள். அவள் கனவில் லக்ஷ்மி தேவியே வரலக்ஷ்மியாக வந்தாள்.

``பெண்ணே, நீ செய்த பூஜையால் அக மகிழ்ந்து உன் கனவில் வந்தேன். யார் என்னைத் துதித்து வரலக்ஷ்மி விரதத்தைச் செய்தாலும் நான் அவர்கள் வீட்டில் வசிப்பேன். அனைவரிடமும் இந்தப் பூஜையைப் பற்றி எடுத்து உரைப்பாயாக. உன் இல்லத்திலும் நான் வசிப்பேன்'' என்று கூறினாள்.

ஒரு சமயம் லக்ஷ்மி தேவி எந்த வீட்டில் வாசம் செய்யலாம் என்று பார்க்க வருகிறாள். ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு வீட்டில் மாடும், கன்றும் இருந்தாலும் ஒரே தூசியும், குப்பையுமாக இருக்கிறது. மூன்றாவது வீட்டில் ஒரே சண்டை. மனைவி தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருக்கிறாள். நான்காவது வீட்டில் வாசலில் கோலம் போட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி, அந்த இல்லத்தரசி ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

வாசலில் நின்ற லக்ஷ்மியைப் பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைக்கிறாள். மனையைப் போட்டு அமர வைத்து விட்டு உள்ளே போய் பால் எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் அந்த அம்மாள் இல்லை. பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடக்கிறது. அதாவது லக்ஷ்மி தேவி எங்கும், எப்பொழுது வேண்டுமானாலும் வருவாள். வரலக்ஷ்மி பூஜை செய்ய முடியாதவர்கள் நெக்குருகி வெள்ளிக்கிழமை பூஜை, வைபவ லக்ஷ்மி பூஜை, குபேர லக்ஷ்மி பூஜை என்று செய்து லக்ஷ்மியை ``லக்ஷ்மி ராவே மாயிண்டிக்கி-ஸ்ரீராஜ புத்ரி'' என்று அழைக்கலாமே. வருவாள். நிச்சயம் வரம் தருவாள்!

2 comments:

')) said...

மிக மிக அருமை ... நன்றி ....

')) said...

மிக மிக அருமை ... நன்றி ....