
திருமழிசை வைணமும், சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமி. திருமழிசை என்னும் இந்த திருத்தலம் உலகிலேயே தனி மகிமை பொருந்திய தலமாகக் கருதப்படுவதால் அந்த அர்த்தத்தில் `மழிசை' எனப் பெயர் வந்தது. அத்துடன் இந்தத் தலத்தின் திருமகள் திருமங்கைவல்லி என்ற பெயருடன் உறைந்து இருப்பதால் `திரு' என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டு `திருமழிசை' என்று அழைக்கப்படுகிறது.
மிகவும் புகழ் பெற்று விளங்கிய இந்தத் தலத்தில்தான் பன்னிரு ஆழ்வார்களில் நான்காவது ஆழ்வாரும், சான்றோர்களில் மிகச் சிறந்தவர் எனப் போற்றப்படும் திருமழிசை ஆழ்வார் தோன்றினார். இந்த தலத்தின் ஸ்தலாதிபதியாக, ஜெகன்னாதப் பெருமாளுக்குச் சமமான இவரும் பெரிய கோயிலில் குடிகொண்டு இருக்கிறார்.
இந்தத் தலத்தின் உயர்வையும், மேன்மையையும் நமக்கு விளக்க இதோ ஒரு புராண கால நிகழ்வு!
ஒரு முறை அத்ரி, பிருகு, வசிஷ்டர், பார்க்கவர் முதலிய பிரம்மரிஷிகள் சத்ய லோகத்திற்கு சென்றனர். அங்கு பிரம்மதேவரைச் சந்தித்து ஈரேழு உலகங்களிலும் சிறந்த உலகமான பூவுலகில் தவம் செய்ய எங்களுக்கு ஒரு உயர்வான இடத்தைத் தாங்கள் காட்டி அருள வேண்டும் என்று விண்ணப்பித்தனர்.
உடனே நான்முகன் தேவ சிற்பியான சதுர்முகனை அழைத்து ஒரு துலாக்கோல் கொண்டு வரும்படி சொன்னார். ஒரு தட்டில் திருமழிசைத் தலத்தையும், இன்னொரு தட்டில் உலகின் மற்ற பகுதிகளையும் வைத்து எடை போடச் சொன்னார். திருமழிசை இருந்த தட்டு தாழ்ந்து உலகில் தனது சிறப்பான இடத்தை முனிபுங்கவர்களுக்கு உணர்த்தியதாம். உலகில் எல்லாப் புண்ணியத் தலங்களையும் விட மகிமையும், பெருமையும் வாய்ந்தது திருமழிசை என்பதைத் தெரிந்து கொண்டு முனிவர்கள் அனைவரும் இங்கு வந்து தவம் செய்ய ஆரம்பித்தனராம்.
ஆலயம்: ஐந்து நிலைகளை உடையது. ஏழு கலசங்கள் கொண்டது.
தலதீர்த்தம்: திவ்யமானதும், பாவம் போக்குவதுமான பிருகு தீர்த்தம்.
தலவிருட்சம்: பாரிஜாத மரம்.
தலமூலவர்: ஜெகன்னாதப் பெருமாள், ருக்குமணி, சத்யபாமா சமேதரராக கிழக்கு முகமாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். மார்க்கண்டேய முனிவரும், பிருகு முனிவரும் உடன் அமர்ந்து சேவிக்கிறார்கள்.
அருள்மிகு திருமங்கைவல்லித் தாயார்!
இவரை நம்பிக்கையுடன் வேண்டும் பக்தர்களுக்கு சகலவிதமான ஐஸ்வர்யங்களையும், புத்திர பாக்கியத்தையும், நிறைவான வாழ்க்கையையும் தருகிறார். திருவே உருக்கொண்டிருக்கும் இந்தக் தாயாரை வணங்கினால் சகல சௌபாக்கியங்களையும் பெற முடிகிறதாம்.
பிராகார தேவதை!
கருணையே வடிவாக பிராகார தேவதையாக இந்தத் தலத்தில் ஸ்ரீவைஷ்ணவி திருமாலின் சங்குச் சக்கரங்களைத் தாங்கி நின்று சேவைசாதிக்கிறாள். விரைவில் திருமணம் நடக்க வேண்டுமென்றால் வைஷ்ணவி தேவிக்கு பூமாலை வழிபாடும், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இராகுகாலத்தில் விசேடத் திருமஞ்சனப் பிரார்த்தனையும் செய்தாலே போதுமாம். அருகிலேயே ஸ்ரீ அழகிய சிங்கர் சன்னதியில் லட்சுமி தேவியை தன் மடியில் வைத்துக் கொண்டு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் காட்சி தருகிறார்.அடுத்தடுத்து ஆண்டாள் சன்னதியும், ஸ்ரீவைஷ்ணவர்களின் ஒப்பற்ற குருவான ஸ்ரீமத் மணவாள சுவாமிகள் சன்னதியும் இருக்கிறது. பெருமாள் கோவிலின் மத்தியில் பிரதானமாகக் காட்சி தரும் இந்த விநாயகரின் வயிற்றின் நடுப்பகுதியில் ராகுவும், கேதுவும் இணைந்துள்ளது.இவரை வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
முக்கிய திருவிழாக்கள்
இங்குப் பிரதி ஆண்டும் ஆனிமாதம் ஸ்ரீஜெகன்னாதப் பெருமாளுக்கு பிரம்மோற்ஸவமும், ஐப்பசி மாதத்தில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உத்ஸவமும், தைமாதத்தில் மக நட்சத்திரத்தில் ஸ்ரீதிருமழிசை ஆழ்வாரின் திருஅவதார மகோத்ஸவமும், மாசி மாதத்தில் 3 நாட்கள் தெப்போத்ஸவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
திருமழிசை ஆழ்வாரின் பிறப்பும், அற்புதங்களும்
முன்னொரு காலத்தில் தொண்டை நாட்டில் மகிமை பொருந்திய இந்தத் திருமழிசைத் திருத்தலத்தில், முனிவருக்கும், இவரது பத்தினி கனகாங்கிக்கும் 12 திங்கள் கருவில் உருவாகி, சித்தாத்ரி ஆண்டு, தைத் திங்கள் தேய்பிறை கிருஷ்ணபட்சம் பொருந்திய பிரதமை திதியின் ஞாயிற்றுக்கிழமை அன்று மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆழி அம்சமாய் உடலில் எந்த உறுப்புகளுமே இல்லாத ஒரு சதைப் பிண்டம் பிறந்தது. மலையத்தனை வருத்தத்தை மனதில் கொண்டவர்களாய் அந்தப் பிண்டத்தை அருகில் இருந்த புதரில் வீசி எறிந்துவிட்டுச் சென்று விட்டார்கள் அந்தத் தம்பதியர்.
திருமாலும், திருமகளும் அங்கு தோன்றி அந்தப் பிண்டத்துக்கு உயிர் கொடுத்து ஒரு அழகிய ஆண் குழந்தையாக மாற்றினார்கள். அவர்கள் மறைந்ததைப் பார்த்த குழந்தை அவர்கள் மீண்டும் தன் முன் தோன்ற வேண்டும் என்று பிடிவாதமாய் அழுதது. அங்கு வந்த திருவாளன் என்ற வயதான வேளாளன் அந்தக் குழந்தையைத் மகிழ்வுடன் எடுத்துச் சென்று தன் மனைவி பங்கஜவல்லியிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னான்.
திருமாலின் அருள் பெற்ற அந்தக் குழந்தை, பால் எதுவும் குடிக்காமல் சிறுநீர் கூடக் கழிக்காமல் அழுது கொண்டிருந்ததைக் கேள்விப்பட்ட, அந்த ஊரில் சான்றோனான ஒரு முதியவர் வந்து பாலைக் கொடுக்க குழந்தை குடித்தது. அதில் இருந்த மீதிப்பாலைக் குடித்த ஆழ்வாரின் வளர்ப்புப் பெற்றோர்கள் வாலிபம் திரும்பி இளையவர்களாக மாறி கணிகண்ணன் என்ற குழந்தையை பெற்றார்கள். இந்தக் கணி கண்ணன்தான் திருமழிசை ஆழ்வாரின் பிரதான சீடர் ஆவார்.
திருமழிசை ஆழ்வார் அஷ்டாங்க யோகம் செய்து இறைவனை அடையும் பொருட்டு சீக்கியம், பௌத்தம் என ஏழுக்கும் அதிகமான மதங்களில் சேர்ந்தார். சைவ மதத்தில் சிவவாக்கியம் என்ற பெயருடன் சிவவாக்கியர் திருஆயிரம் என்ற பதிகத்தை இயற்றினார்.
பிறகு திருமயிலை வந்து பேயாழ்வாரைச் சந்தித்தார். அவர் நாராயணின் திருமந்திரத்தை இவருக்கு முறைப்படி உபதேசித்து இவரை ஸ்ரீவைஷ்ணவராக்கினார். அதன்பின் திருமழிசைக்கு வந்து அங்கிருந்த கஜேந்திரசரஸ் என்ற குளத்தின் கரையில் அமர்ந்து இறைவனின் அருளால் பல்வகை யோகங்கள் கைவரப் பெற்றார்.
பைநாகப் பாயை சுருட்டிக்
கொண்ட வைகுந்தன்!
இவரும், இவர் சீடர் கணி கண்ணனும் காஞ்சியில் இருந்தனர். அப்பொழுது இவருக்கு பணிவிடைகள் செய்த ஒரு வயதான மாதுவை இளம் மங்கையாக்கினார். அவள் பேரழகில் மயங்கி மணம் புரிந்த அந்த நகரின் மன்னனான பல்லவராயன் தன்னையும் ஆழ்வாரிடம் வாலிபனாக்கும்படி கேட்டார். ஆனால் அவர் அதை மறுத்துவிட கணி கண்ணனாரையும் காஞ்சி நகரை விட்டு வெளியேறச் சொல்லிவிட்டார். உடனே திருமழிசை ஆழ்வார் அங்குக் கோவில் கொண்டு இருந்த வைகுந்த வாசனைப் பார்த்து
``கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணன் நீ கிடக்க வேண்டா - துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன், நீயுமுன்
பைநாகப்பாய் சுருட்டிக் கொள்''
என்று பாட, வைகுந்த வாசனும் தம் பைநாகப் பாயை சுருட்டிக் கொண்டு ஆழ்வார் பின்னாடியே சென்று விடுகிறார். மற்ற தேவர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்றுவிட காஞ்சி மாநகரமே இருட்டில் மூழ்கி விடுகிறது. தன் தவறு உணர்ந்த மன்னன் அவர்கள் காலில் விழுந்து வேண்ட, ஆழ்வார் தன் பின்னாடி வந்த வைகுந்த வாசனை ``நீயும் உன் பைநாகப் பாய் சுருட்டிக் கொள்'' என்று பாட வைகுந்த வாசனும் திரும்பிச் சென்று ஆலயத்துக்குள் படுத்துக் கொண்டாராம்!
ஒரு தரம் திருமழிசை ஆழ்வார் பிச்சை ஏற்கப் புறப்படுகிறார். கோவிலில் குடிகொண்டிருந்த எம்பெருமான் இவர் செல்லும் இடங்களில் எல்லாம் தன் முகத்தைத் திருப்பியிருக்கிறார். இதைப் பார்த்த கோவில் அர்ச்சகர் இதைப் பற்றி அங்கு யாகம் செய்து கொண்டிருந்த பெரும்புலியூர் அடிகளிடம் சொல்ல, அவரும் இவரைப் பணிந்து வரவேற்று யாகசாலையில் பெரும்பீடத்தில் அமரவைத்தார். இவருக்கு பெரும்புலியூர் அடிகள் சுக்கிரபூசை மரியாதையை செய்ய முற்படுகிறார். அங்கிருந்த வேள்விச் சடங்கர்கள் பக்திசாரரான திருமழிசை ஆழ்வாரை இழிவுபடுத்திப்பேசுகிறார்கள். இதனால் மனம் நொந்த பெரும்புலியூர் அடிகளார் அவர்களுக்குப் புத்தி புகட்டும்படி ஆழ்வாரை வேண்டி நின்றார். ஆழ்வார் உடனே எம்பெருமானை எண்ணி
``சக்கரங்கொள் கையனே சடங்கர் வாயடங்கிட
உட்கிடந்த வண்ணமே புறம் பொசிந்து காட்டிடே''
என்று பாட, உடனே திருமாலும் யாவரும் காணும்படி ஆழ்வாருடைய திருமேனியில் திருப்பாற்கடலில் தாம் பள்ளி கொண்டு இருக்கும் காட்சியை யாவரும் காணும்படி செய்தாராம். இந்தக் காட்சியை கண்டு மனம் பதறிய வேள்வி சடங்கர்கள் ஆழ்வாரின் திருவடிகளில் வீழ்ந்து தம்மைப் பொறுத்தருள வேண்டி நின்றார்களாம்.
உலகம் உய்ய தன் பாசுரங்கள் மூலம் பல தத்துவ உண்மைகளைக் காட்டி அப்பகுதியில் பல்லாண்டுகள் வாழ்ந்து சமாதியானார் திருமழிசை ஆழ்வார்.
இவரால் பாடல் பெற்ற தலங்கள்
திருவரங்கம், அன்பில், திருப்பேர் நகர், கும்பகோணம், கவித்தலம், திருக்கோட்டியூர், திருக்கூடல், திருக்குறுங்குடி, திருப்பாடகம், திருவூரகம், திருவெஃகா, திருவெள்ளூர், திருவேங்கடம், திருப்பாற்கடல், துவாரகை, பரமதம் முதலியன.
ஆலயம் செல்லும் வழி: சென்னையிலிருந்து பூந்தமல்லிக்கு பஸ்ஸில் சென்றுவிட்டு, அங்கிருந்து ஆட்டோ அல்லது பஸ் மூலமாக ஆலயத்துக்கு செல்லலாம்!
0 comments:
Post a Comment